மடிப்பாக்கத்தில் மழைநீர் கால்வாய் வசதி இல்லாததால் ஒவ்வொரு மழைக்கும் குடியிருப்பு பகுதிகளில், மழைநீர் தேங்கி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.எனவே, மடிப்பாக்கம் பகுதிக்கு தனி கவனம் செலுத்தி மழைநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.சென்னையை அடுத்த மடிப்பாக்கம் கடந்த 15 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்துள்ளது. வேளச்சேரி மேம்பால ரயில் திட்டத்திற்கு பின் இப்பகுதியில் உள்ள நிலங்களில் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. இருப்பினும் அங்கு அடிப்படை வசதி என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.மடிப்பாக்கத்தில் 70க்கும் மேற்பட்ட நகர்களும், 120க்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகம். ஒரு கிரவுண்டு (5.5 சென்ட்) இடத்தில் நான்கிலிருந்து எட்டு பிளாட்டுகள்வரை கட்டப்பட்டுள்ளன.குடியிருப்புகள் அதிகமிருந்தாலும் பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய் என எந்த வசதியும் இதுவரை அமையவில்லை.இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல ஆண்டு காலமாக தெருக்களில் தான் சங்கமமாகிறது. சாலையில் தேங்கும் கழிவுநீர், நிலத்தடி நீருடன் பல ஆண்டுகளாக கலந்து வருகிறது. இதனால், நிலத்தடி நீரின் தன்மை, சுவை மாறியுள்ளது.மேலும், சுகாதார சீர்கேடு, கொசுத் தொல்லை போன்ற பல பிரச்னைகளில் இப்பகுதி மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். மடிப்பாக்கம் பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கைகளில் ஒன்று தெருக்களில் கால்வாய் அமைப்பது.அமைச்சர், எம்.எல்.ஏ., சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் என பலரை தொடர்ந்து சந்தித்தும் பொதுமக்களின் கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் கால்வாய் அமைக்க திட்டமிப்பட்டு, அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் துவக்கப்பட்டன.ஆனால், அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரால் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.சமீபத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மடிப்பாக்கம் ராம்நகர், சதாசிவம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி செல்ல வழியில்லாமல் உள்ளது.இதனால், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மழைநீர் செல்ல ஒரு சில இடங்களில் சாலையை தோண்டியுள்ளனர். இதனால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மழைநீர் கால்வாய் வசதியை முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நன்றி தினமலர் செப்டம்பர் 19,2010
நன்றி தினமலர் செப்டம்பர் 19,2010
No comments:
Post a Comment