மடிப்பாக்கத்தின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கும் பெரிய ஏரிக்கு, மழைநீர் வரும் போக்கு கால்வாய் மூடப்பட்டுள்ளது. இதனால், வரும் காலத்தில் ஏரி வற்றிவிடும் அபாயம் உள்ளது. மேலும், ஏரியின் அருகில் கழிவுநீர் உந்து நிலையம் அமைப்பதால், கழிவுநீர் கலக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மடிப்பாக்கம் ஊராட்சியில், ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அந்த ஊராட்சியின் பிரதான பகுதிகளான ராம்நகர், சதாசிவம் நகர், பாலையா கார்டன் ஆகிய பகுதி நிலத்தடி நீர், உவர்ப்பு தன்மை கொண்டது. இதனால், மடிப்பாக்கம் மக்கள், ஏரி நீரையே நம்பி வாழ்கின்றனர். பெரிய ஏரியில் இருந்து, 20க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மடிப்பாக்கம் ஏரிக்கு திரிசூலம், மூவரசம்பட்டு மற்றும் கீழ்கட்டளை பகுதி ஏரிகளில் இருந்து, உபரிநீர், போக்கு கால்வாய் வழியாக வந்து சேரும். மடிப்பாக்கம் ஏரியின் உபரி நீர் கீழ்கட்டளை, மேடவாக்கம் மெயின்ரோடு வழியாக நாராயணபுரம் ஏரிக்கு செல்லும் போக்கு கால்வாயை சென்றடையும். தற்போது, கீழ்கட்டளை சீனிவாச பெருமாள் கோவில் அருகில் செல்லும் சிறு பாலம் உடைக்கப்பட்டு போக்குகால்வாய் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், மழைநீர் செல்வது தடைபட்டுள்ளது. மேலும், மடிப்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் போக்கு கால்வாய் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த இடத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பல்லாவரம் நகராட்சி சார்பில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், எதிர்காலத்தில் மடிப்பாக்கம் ஏரியில் மழைநீர் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுநலச் சங்கத்தினர் மற்றும் நீர் எக்ஸ்னோரா அமைப்பினர் கூறுகையில், "மடிப்பாக்கம் பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் பெரிய ஏரி காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு போக்கு கால்வாய் மிகவும் அவசியம். "அதேபோல உபரி நீர் செல்லும் கால்வாயும் மீண்டும் அமைக்க வேண்டும். அங்கு கழிவுநீர் உந்து நிலையம் அமைக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஊராட்சி அனுமதி மட்டும் பெற்று, தற்போது உந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்க தடை விதிக்க வேண்டும்' என்றனர்.
பாறை உடைக்க வெடி வைப்பதால் அதிரும் கட்டடங்கள் : கீழ்கட்டளை - மடிப்பாக்கம் இடைப்பட்ட பகுதியில் கழிநீர் உந்து நிலையம் அமைக்கும் இடத்தில் பாறைகள் அதிகம் காணப்படுகின்றன. அதை வெடி வைத்து தகர்த்து வருகின்றனர். வெடி வைப்பதால் சுற்றியுள்ள கட்டடங்களில் அதிர்வு காணப்படுகிறது. ஏராளமான பாறைகள் பறந்து குடியிருப்புகளின் மீது விழுகின்றன. குடியிருப்புப் பகுதிகளில் வெடி வைக்கவே கூடாது. அவ்வாறு வெடி வைப்பதற்கு ஜெ, என்- லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். வெடி வைக்கும் போது தொடர் விசில் கொடுக்க வேண்டும். சிவப்பு கொடிகளை ஆங்காங்கே பறக்க விடவேண்டும். ஆனால், பொதுமக்களுக்கு எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் பாறைகளை பிளக்க வெடி வைப்பதால், அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நன்றி
தினமலர் டிசம்பர் 31,2010
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=156348
No comments:
Post a Comment